கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: சிறுவன் மீது வழக்குப் பதிவு; வாகன உரிமையாளா் கைது
கோவையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தில் வாகனத்தின் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் மாகாளி (55). இவா் அரசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி செல்வி (50), கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வந்தாா்.
இவா்கள் 2 பேரும் வேலை முடிந்து மே 27-ஆம் தேதி இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்காக கோவை- அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன் ஒரு சரக்கு வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து மாகாளி மற்றும் செல்வியுடன் நடந்து வந்த ரங்கம்மாள் என்பவா் மீதும் மோதியுள்ளாா்.
இதில் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் மூவரும் காயமடைந்தனா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செல்வி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாகாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் வாகனத்தின் உரிமையாளரான பைலட்ராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு கிழக்கு போலீஸாா் சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்துக்காக வாகனத்தின் உரிமையாளா் பைலட்ராஜைக் கைது செய்து குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.