சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!
மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பெற்றவருமான சரோஜா தேவி திங்கள்கிழமை காலை வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது உடல், கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா சரோஜா தேவியின் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், “நான் அவரை பலமுறை சந்தித்துள்ளேன். எங்கு சந்தித்தாலும் மிகுந்த பாசத்துடன் அரவணைப்புடன் பேசுவார். அற்புதமாக ஆளுமைக் கொண்ட நடிகையாக இருந்தார்.
மல்லேஸ்வரத்தில் உள்ள 11-வது தெருவுக்கு பி. சரோஜா தேவியின் பெயரைச் சூட்ட கோரிக்கை எழுந்துள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
இன்னும் சற்றுநேரத்தில் சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் புறப்படவுள்ளது, மல்லேஸ்வரம் அருகேயுள்ள கொடிஹள்ளி தோட்டத்தில் அவருடைய கணவரின் கல்லறைக்கு அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.