சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித்..! பாண்டிங் ஆதரவு!
ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவரும் முன்னாள் ஆஸி. கேப்டனுமான ரிக்கி பாண்டிங் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்க ஆதரவு தெரிவித்துள்ளார். நங்கூரமாக நின்று ஸ்மித் விளையாடுவாரெனக் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இன்றுமுதல் (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கின.
ஆஸி. அணியில் முக்கியமான 5 அனுபவமிக்க வீரர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக புதிய இளம் வீரர்கள் உடன் ஸ்மித் தலைமையில் ஆஸி. அணி களமிறங்குகிறது.
ஆஸி. முதல் போட்டி பிப்.22ஆம் தேதி லாகூரில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. அடுத்தடுத்து பிப்.25இல் தென்னாப்பிரிக்கா, பிப்.28இல் ஆப்கானிஸ்தானுடனும் விளையாடவிருக்கிறது.
ஹெட்டுடன் யார் களமிறங்குவார்கள்?
பிபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக 64 பந்துகளில் 121* ரன்கள் குவித்து அசத்தினார்.
151 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 8ஆவது இடத்திலிருந்து பல்வேறு நிலைகளில் விளையாடியுள்ளார். ஆனால், தொடக்க வீரராக மட்டும் களமிறங்கியதில்லை.
ஜேக் பிரேசர் மெக்கர்க் 7 போட்டிகளில் 98 ரன்களும் மேத்திவ் ஷார்ட் 13 போட்டிகளில் 197 ரன்கள் அடித்துள்ளார். தற்போது டிராவிஸ் ஹெட்டுடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் ஐசிசி ரிவிவ்யூ நிகழ்ச்சியில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது:
நங்கூரமாக ஸ்மித் இருப்பார்
தேர்வுகுழுத் தலைவர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஜேக் பிரேசர் மெக்கர்க் ஏற்படுத்துகிறார். அவருக்கு சிறப்பான கோடைக் காலம் அமையவில்லை. ஆஸி. அணியில் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். அதனால், தேர்வுக்கு குழு தலைவர்கள் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரம் இது.
இந்த நேரத்தில் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினால் நன்றாக இருக்குமென நினைப்பார்கள். ஏனெனில், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஸ்மித் அசத்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் டாப் ஆர்டர்களில் களமிறங்கி நங்கூரமாக ஸ்மித்தால் செயல்பட முடியும். அவர் தற்போது இருக்கும் ஃபார்முக்கு பெரிய ரன்கள் குவிக்க முடியும்.
ஜேக் பிரேசர் மெக்கர்க் அவரது சிறப்பான தரத்தில் விளையாடவில்லை. அவரால் ஆஸி.க்காக கோப்பையை வென்று தர முடியும் என பலர் நினைக்கிறார்கள். பயிற்சியாளர்களும் அதை அவரிடம் தெரிவிப்பார்கள். ஆனால், தேர்வுக்குழுவினர் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்பது முதல் போட்டியில்தான் தெரியவரும் என்றார்.