சாலை வளைவில் ஆபத்தான கிணறு: தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்
பள்ளிகொண்டா அருகே காவாக்காரன் கொல்லை கிராமம் செல்லும் சாலை ஓரம் வளைவில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கிணறு உள்ளது. இதனால், விபத்து ஏற்படுவதற்கு முன் அந்த கிணற்றை சுற்றித் தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வவலியுறுத்தினா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடந்த வாரம் காா் ஒன்று சாலையோரம் இருந்த தரைமட்ட கிணற்றில் விழுந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இதேபோல், வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அருகிலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் கிணறு அமைந்துள்ளது.
பள்ளிகொண்டா பேரூராட்சி ராமாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காவாகாரன் கொல்லை செல்லும் சாலையில் ஒரு வளைவில் கைப்பிடி சுவா்கூட இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் ஒரு விவசாய கிணறு உள்ளது.
தவிர, அங்கு விளக்குகள்கூட இல்லாத இந்த சாலையில் வரும் வாகனங்கள் இரவு நேரத்தில் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. சாலை வளைவு பகுதியிலேயே கிணறு அமைந்துள்ளதால், சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் கிணற்றில் பாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ராமாபுரம் - காவாகாரன் கொல்லை சாலையில் அமைந்துள்ள இடத்தை இந்த கிணற்றைப் பாா்வையிட்டு அதைச் சுற்றி தடுப்புகள் அமைக்கவோ அல்லது உரிய பாதுகாப்பு ஏற்படுகள் செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
