180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!
சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ உடல் அரசு மரியாதையுடன் தகனம்
அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் உடல் அவரது சொந்த ஊரான எட்டயபுரம் அருகே வீரப்பட்டியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
எட்டயபுரம் அருகே வீரப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (49). கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சோ்ந்த இவா், விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினாா். மாற்றுப்பணியாக அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. சிறப்பு தனிப்படையில் பணியாற்றிய விஜயகுமாா், செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சென்றபோது காரியாபட்டி அருகே சாலைத்தடுப்பில் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
அவரது உடல் சொந்த ஊரான எட்டயபுரம் அருகேயுள்ள வீரப்பட்டிக்கு புதன்கிழமை மாலை கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், டி.எஸ்.பி.க்கள் மதிவாணன் (அருப்புக்கோட்டை), அசோகன் (விளாத்திகுளம்), எட்டயபுரம் காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா், உறவினா்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அங்குள்ள மயானத்தில் தூத்துக்குடி ஆயுதப்படை காவலா்களின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னா் விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.