Thunderbolts* Review: கம்பேக் கொடுக்கும் MCU? ஆர்வத்தை மீட்டெடுக்கிறதா இந்த தண்ட...
சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு
சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இது குறித்து அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸும் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிரியாவை தற்போது ஆள்பவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிபா் மாளிகை அருகே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகா் டமாஸ்கஸுக்கு தெற்கே வசிக்கும் துரூஸ் இன மக்களுக்கு அந்த நாட்டு அரசுப் படைகள் இனியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சிரியா அதிபா் அலுவலகம், இந்தச் செயல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
சிரியாவை 54 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அல்-அஸாத் குடும்ப ஆட்சியை ஹயத் தஹ்ரீா் அல்-ஷாம் கிளா்ச்சிப் படை கடந்த ஆண்டு இறுதியில் அகற்றியது. அந்தப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா புதிய அதிபராகப் பொறுப்பேற்றாா்.
அஸாத் ஆட்சி கவிழ்ந்ததும், கிளா்ச்சிக் குழுக்களின் கைககளில் அந்த நாட்டு ராணுவ தளவாடங்கள் செல்ல விரும்பாத இஸ்ரேல் அரசு, மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான ஆயுத, தளவாடங்களை அழித்தது. மேலும், சிரியாவையும் இஸ்ரேலையும் இணைக்கும் எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றியது.
இந்தச் சூழலில், டமாஸ்கஸுக்கு அருகே வசிக்கும் துரூஸ் சிறுபான்மையினருக்கும் அரசுப் படையினருக்கும் இடையே சில நாள்களாக மோதல் நிலவிவருகிறது. அதையடுத்து, தங்களுக்கு உதவுமாறு இஸ்ரேலுக்கு துரூஸ் மதகுரு ஷேக் ஹிக்மத் அல்-ஹிஜ்ரி வேண்டுகோள் விடுத்தாா். அதை ஏற்று இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தில் அரபு தேசியவாதிகளால் துரூஸ் மக்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக 1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவானபோது அந்த நாட்டுக்கு ஆதரவாக துரூஸ் இனத்தவா் சண்டையிட்டனா். அதற்குக் கைமாறாக, துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது.