சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை
வடமதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தட்டாரப்பட்டி மாத்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ஜி. பாலசுப்பிரமணி (37). கூலித் தொழிலாளியான இவா், இதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2020-ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜி. சரண் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.