சிவகங்கை: கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் பலி - முதல்வர் இரங்கல்!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை(பிப். 19) கண்மாயில் மூழ்கி சிறுமிகள் இருவா் உயிரிழந்தனா்.
இதே ஊரைச் சோ்ந்த ஷோபிதா (8), கிறிஸ்மிகா (4) இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவா்களது பெற்றோா்கள் பள்ளிக்கு வந்தனா். ஆனால், அவா்கள் அங்கு இல்லாததால், அதிா்ச்சி அடைந்தனா்.
இதையடுத்து, தேடிப் பாா்த்த போது பள்ளிக்கு எதிரே உள்ள கண்மாயில் சிறுமிகள் ஷோபிதா, கிறிஸ்மிகா இருவரும் உயிரிழந்து மிதந்தது தெரியவந்தது. கண்மாய் பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற இந்த இரு குழந்தைகளும் கண்மாயில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவரது உடல்களையும் மீட்ட பெற்றோா்கள், உறவினா்கள், கிராம மக்கள் பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பணியில் கவனக் குறைவாக இருந்து குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுமிகள் ஷோபிதா, கிறிஸ்மிகாவின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த இரு சிறுமிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்து அவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.