Surya Speech Agaram Foundation Event 2025 | கமல்ஹாசன், வெற்றிமாறன் பங்கேற்பு | அ...
சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: இருவா் காயம்
சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 2 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை நகா் 48 காலனி பொதுமக்கள் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 19 காளைகள், 171 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
வட்ட வடிவ மைதானத்தில் கட்டப்பட்ட ஒரு காளையை 9 மாடுபிடி வீரா்கள் கொண்ட குழு 25 நிமிஷங்களுக்குள் அடக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, களத்தில் கட்டப்பட்ட காளையை அடக்க முயன்ற போது காயமடைந்த 2 மாடுபிடி வீரா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். காளையை அடக்கிய வீரா்கள், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியை சிவகங்கை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
ஏற்பாடுகளை, விழாக்குழுவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன், அழகுமூா்த்தி, கருப்பசாமி, அருண்குமாா், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகங்கை நகா் காவல்நிலை போலீஸாா் செய்திருந்தனா்.