சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா! வீண் புரளிகளுக்குப் பதில்!
மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தியுள்ளனர்.
கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா பொது வெளியில் பேசினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவின. நீண்ட இழுப்பறிக்கு பிறகு மூத்த தலைவர்களின் பேச்சுவார்த்தை உறுதியைத் தொடர்ந்து டி.கே. சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.
இந்தநிலையில், கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு அடிபட்டது.
இந்த விவகாரம் குறித்து இன்று(ஜூன் 30) பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. முடிவெடுக்கும் உரிமையை உயர்நிலைக் குழுவிடம் விட்டுவிட்டோம், நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. யாரும் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடகத்தின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்து இன்றுமுதல் 3 நாள்களுக்கு ஆலோசனை நடத்துகிறார்.
இந்தநிலையில், மைசூரு விமான நிலையத்தில் திங்கள்கிழமை(ஜூன் 30) ஒன்றாகக் கைகோர்த்தபடி பேட்டியளித்த சித்தராமையாவும் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதையும் ஒற்றுமையாகச் செயல்படுகிறோம் என்பதையும் மக்களிடையே வெளிப்படுத்தியுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், “தசரா விழாவை நாnஏ தொடக்கிவைப்பேன் என்று சொல்கிறேன்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? டி. கே. சிவகுமாரும் நானும் ஒருங்கே இணைந்து இருக்கிறோம். இந்த அரசு, ஐந்தாண்டுகளுக்கு ’பாறை போல’ பலமாக நிலைபெற்றிருக்கும்.
பாஜக பொய் பிரசங்கங்களுக்கு பெயர்போனதொரு கட்சி. அவர்கள் அதையே செய்வார்கள்.
எங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. நாங்கள்(சிவகுமாரும் - சித்தராமையாவும்) ஒற்றுமையாகவே இருக்கிறோம்” என்றார்.