புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்
ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர்.
இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 2 பெண்கள் உள்பட மொத்தம் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஒடிஸாவில் ஆளும் பாஜக அரசின் மோசமான நிர்வாகத்தால் புரி ரத யாத்திரையில் அசம்பாவிதம் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதையடுத்து, இந்த அசம்பாவிதத்துக்கு முழு பொறுப்பேற்றுக்கொண்டு, அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஜி, துணை முதல்வர் ப்ரவதி பரிதா மற்றும் சட்ட அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் ஆகியோர் பதவி விலக ஒடிஸா பிரதேச காங்கிரஸ் கமிட்டி(ஓபிசிஜி) திங்கள்கிழமை(ஜூன் 30) வலியுறுத்தியுள்ளது.

புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கி ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நிவாரண தொகையை ரூ. 50 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும் மாநில அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அதேபோல, காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Puri stampede: Congress demands resignation of Odisha CM