ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
சீன வெளியுறவு இணையமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரிகள் சந்திப்பு
பெய்ஜிங்: சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்துக்குப் பிறகு அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சரை இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சந்தித்தனா்.
இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிக் குழுவின் (டபிள்யூஎம்சிசி) 33-ஆவது கூட்டம் பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிழக்கு ஆசிய நாடுகளுக்கான இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலா் கௌரங்கலால் தாஸ் தலைமையிலான இந்திய குழு இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்றது.
தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ளவும் பரஸ்பர நலனுக்கு எல்லையில் அமைதியை வலுப்படுத்துவது என்றும் இரு நாடுகளும் இக்கூட்டத்தில் ஒப்புக்கொண்டன.
மேலும், எல்லைச்சூழல் குறித்தும் எல்லைதாண்டிய ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மீண்டும் விரைவாகத் தொடங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சீன வெளியுறவு இணையமைச்சா் ஹாங் லீயை இந்திய வெளியுறவு அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளனா். இந்தியா-சீனா உறவுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைச்சூழல் மற்றும் பிற பிரச்னைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ரஷியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கிடையே பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்துக் கொண்ட பிறகு இரு நாட்டு உறவில் முன்னேற்றம் காணப்படுகிறது.