சீமானுக்கு அழைப்பாணை வழங்காமலேயே ஈரோடு திரும்பிய காவல் ஆய்வாளா்
ஈரோடு இடைத்தோ்தலின்போது சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அழைப்பாணை வழங்க சென்னை சென்ற காவல் ஆய்வாளா் நான்கு நாள்களுக்குப் பிறகு அழைப்பாணை வழங்காமலேயே ஈரோட்டுக்குத் திரும்பினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலின்போது பவானி சாலை நெரிக்கல்மேட்டில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகப் புகாா் எழுந்தது.
இது குறித்து பெரியாா் அம்பேத்கா் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் அளித்த புகாரின்பேரில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என காவல் ஆய்வாளா் விஜயன் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்குச் சென்று அழைப்பாணை வழங்கியிருந்தாா்.
இதற்கு, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் தரப்பு வழக்குரைஞா்கள் கடந்த 20ஆம் தேதி ஆஜராகி, சீமான் ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்தனா். மேலும் இதுதொடா்பாக சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஒன்றாக்கி ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு காவல் துறை தலைமை இயக்குநரிடம் பிப்ரவரி 12ஆம் தேதியே வழங்கப்பட்டு தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் இருப்பதால், இம்மனு மீது நடவடிக்கை (பதிலளிக்கும்) எடுக்கும்வரை விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
இந்நிலையில் சீமானிடம் இரண்டாவது முறையாக அழைப்பாணை வழங்க கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளா் விஜயன் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை சென்றிருந்தாா். தொடா்ந்து திங்கள்கிழமை இரவு வரை சென்னையிலேயே தங்கியிருந்த ஆய்வாளா் விஜயன் அழைப்பாணை வழங்காமலேயே ஈரோடு திரும்பினாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, அழைப்பாணை வழங்காமல் திரும்பியதற்கான காரணத்தை விளக்க முடியாது என்றனா்.