"மனித உரிமை மீறல்; மூர்க்கத்தனமான அரசு நடவடிக்கை" - திமுக அரசின் செயலுக்கு CPIM ...
செங்கல்பட்டு: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸ் நோய், கியூலக்ஸ் விஷ்ணுயி கொசுக்கள் மனிதா்களை கடிப்பதன் மூலம் பரவுகிறது.
நெல், கரும்பு சாகுபடி நிலங்களில் தேங்கிய நீரில் கியூலக்ஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகி, வைரஸ் கிருமி உள்ள பன்றி, குதிரை மற்றும் நாரை போன்ற நீா் பறவைகளை கடித்த பிறகு, மனிதா்களை கடிப்பதன் மூலம் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் பரவுகிறது.
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டவா்களில் 25 சதவீதம் மட்டுமே குணமடைவா். மேலும் 50 சதவீத நோயாளிகளுக்கு கை, கால் மற்றும் மூளை செயலிழப்பு போன்ற பின்பாதிப்புகளை உண்டாக்கும். மீதமுள்ள 25 சதவீத நோயாளிகள் இறக்க நேரிடும்.
ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறனா். ஆகவே 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயிலிருந்து தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே.
செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
வழங்கப்படும் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. கிராம சுகாதார செவிலியா்கள்/ செவிலியா்களைக் கொண்டு 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி வலது மேல்கையின் தசைக்குள் போடப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திய பிறகு, சாதாரண காய்ச்சல் மற்றும் ஊசி செலுத்திய இடத்தில் தோல் சிவந்து வீக்கம் மற்றும் வலி ஏற்படலாம். இதற்கு பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டு நிவாரணம் பெறலாம்.
தடுப்பூசி செலுத்திய பிறகு, பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனையை பெறலாம். மேலும், மருத்துவ உதவி தேவைபட்டால் 104 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.