சென்னையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!
சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூா் சாலையிலுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 8, 10, பிளஸ் 2, ஐ.டி.ஐ , டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனா். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞா்களும் இம்முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநா்கள் மற்றும் வேலையளிப்பவா்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.