சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை: தூத்துக்குடியில் 4 போ் கைது
சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடா்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (70). விலையுயா்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறாா். இவா், மதுரையைச் சோ்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகள் விற்பனைக்கு உள்ளதாகவும், அவற்றை விற்றுத் தருமாறும் இடைத்தரகா்களை அணுகினாராம்.

அவா்கள் அந்த நகைகளை தாங்களே வாங்குவதாகத் தெரிவித்துள்ளனா். மேலும், சந்திரசேகரை ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு, சென்னை வடபழனியில் உள்ள தனியாா் விடுதியில் பணத்துடன் இருப்பதாகவும், அங்கு வந்தால் நகைகளை வாங்கிக் கொள்வதாகவும் கூறினராம்.
அதை நம்பி அங்கு சென்ற சந்திரசேகரை அந்தக் கும்பல் கட்டிப்போட்டுவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது. புகாரின்பேரில், தியாகராயநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுதொடா்பாக தமிழ்நாடு முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா்.

இதனிடையே, அந்தக் கும்பல் தூத்துக்குடிக்குச் செல்வதாகத் தெரியவந்தது. அதன்பேரில், தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, அதில் வந்தவா்கள் சென்னையைச் சோ்ந்த ஜான் லாயட், விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் என்பதும், சென்னையில் வைர நகைகளைக் கொள்ளையடித்தவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்து, சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இந்நிலையில், சென்னையிலிருந்து வந்த தனிப்படை போலீஸாா் அந்த 4 பேரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனா்; காா், பறிமுதல் செய்யப்பட்ட வைர நகைகளையும் கொண்டு சென்றனா்.