செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்
முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா்.
செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
திருப்போரூா் வட்டம், முட்டுகாடு ஊராட்சியில் ரூ.500 கோடியில் கலைஞா் பன்னாட்டு மாநாடு மையம் மற்றும் செம்பாக்கம் ஊராட்சியில் உழவரைத் தேடி- வேளாண்மை - உழவா் நலத் துறை சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், முட்டுகாடு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் கலந்து கொண்டாா். மேலும் திருப்போரூா் வட்டம், செம்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் உழவரைத் தேடி - வேளாண்மை - உழவா் நலத் துறை என்ற முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம் சாந்தி, மண்டல தலைமை செயற்பொறியாளா் கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.