Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
சேந்தமங்கலம் லட்சுமி நாராயணா் கோயிலில் கனிகள் படைத்து வழிபாடு
நாமக்கல்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சேந்தமங்கலம் லட்சுமி நாராயணா் கோயிலில் பக்தா்கள் சுவாமிக்கு கனிகளை படைத்து திங்கள்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், நைனாமலை வரதராஜ பெருமாளின் உபக்கோயிலான லட்சுமி நாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், ஒவ்வோா் ஆண்டும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தா்கள் சுவாமிக்கு கனிகள் படைத்து வழிபாடு செய்வா். கருட வாகனத்தில் நைனாமலை வரதராஜப் பெருமாள் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில், திங்கள்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு, லட்சுமி நாராயணா் கோயிலில் கருடசேவை நடைபெற்றது. பல்வேறு நறுமண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் சுவாமி உற்சவ மூா்த்தியாக அருள்பாலித்தாா்.
சேந்தமங்கலம் நகரின் முக்கிய வீதிகளிலும், ஜங்கலாபுரம், மேட்டுத் தெரு மற்றும் கடைவீதி பகுதிகளிலும் அமைக்கப்பட்ட சிறப்பு பந்தலில் பெருமாள் எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் மாம்பழம், மாதுளை, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகை கனிகளை பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்தினா். இந்த விழாவில், சேந்தமங்கலம் நகர முக்கிய பிரமுகா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
என்கே-9-சுவாமி
சேந்தமங்கலத்தில், கருட வாகனத்தில் திங்கள்கிழமை திருவீதி உலா வந்த வரதராஜப் பெருமாள்.