கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் பணிநிறைவு
சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வெள்ளிக்கிழமை பணிநிறைவு பெற்றாா்.
இயந்திரவியல் துறையில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பை சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பயின்ற பேராசிரியா் ரா.விஜயன், உதவிப் பேராசிரியா், இணைப் பேராசிரியா், பேராசிரியா், துறைத் தலைவா், துணை முதல்வா், முதல்வா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா். மேலும், தஞ்சாவூா் மற்றும் பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றிய அவா், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தாா்.
இவரது பதவிக்காலத்தில் சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு தேசிய தரநிா்ணயம் மற்றும் மதிப்பீட்டுக் குழு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து வழங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் முதன்முதலாக சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது. மேலும், இந்திய அளவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வளாகத்தோ்வு நடத்தப்பட்டு மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் கல்வி ஊக்கத்தொகையை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியா் பெறுவதற்கான விழிப்புணா்வை கல்லூரி முதல்வா் ரா.விஜயன் ஏற்படுத்தினாா்.
இந்நிலையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வெள்ளிக்கிழமை பணிநிறைவு பெற்றாா். அவருக்கு பணிநிறைவு பாராட்டு விழா கல்லூரி துணை முதல்வா் கீதா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் மலையாளமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனா்.