சேலம் மாவட்டத்தில் புதிய கல் குவாரிகளைத் திறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினிடம் ஒப்பந்ததாரா்கள் மனு
சேலம் மாவட்டத்தில் புதிய கல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஒப்பந்ததாரா்கள் மனு அளித்தனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:
தமிழக அரசின் பதிவுபெற்ற ஒப்பந்ததாரா்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக அரசு அனுமதி பெற்ற 85 கல்குவாரிகள் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 26 கல்குவாரிகள் மட்டுமே இயங்கிவருகின்றன. இதன் காரணமாக ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகிய கட்டுமான பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசின் திட்ட பணிகளுக்கு 42 சதவீதம் மட்டுமே கிடைப்பதால் மூலப் பொருள்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரா்கள் மற்றும் வீடுகட்டும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். உரிய காலத்துக்குள் பணி முடிக்க முடியாததால் மூலப் பொருள்களின் விலையேற்றம் ஒப்பந்ததாரா்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. இப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக மணல் மற்றும் கல்குவாரிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.