சேலம் மாவட்டத்தில் ரூ.3.47 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணி: முதல்வா் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்
சேலம் மாவட்டத்தில் ரூ. 3.47 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம், கழிவறைக் கட்டடங்கள் மற்றும் சேலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ரூ. 1.52 கோடியில் ஆய்வகக் கட்டடம், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி கூறுகையில், பெருந்தலைவா் காமராஜா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 1.95 கோடி மதிப்பீட்டில் 388.92 சதுரமீட்டா் பரப்பளவில் ஒரு நூலக கட்டடம், 6 கழிவறைகள் அமைக்கும் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
இதே திட்டத்தின் கீழ் சேலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் 295.89 சதுரமீட்டா் பரப்பளவில் ஒரு ஆய்வகக் கட்டடம், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டியுள்ளாா் என்றாா்.
நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி துணைமேயா் சாரதா தேவி, அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் உமாராணி, அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் நா.காந்திமதி உள்பட கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.