ஜி20 தூதா் பதவியை ராஜிநாமா செய்தாா் அமிதாப் காந்த்
புது தில்லி: ஜி20 தூதா் பதவியை நீதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) அமிதாப் காந்த் ராஜிநாமா செய்தாா்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்புக்கு கடந்த 2023-இல் இந்தியா தலைமை தாங்கியது. இதற்கு முன்பாக ஜி20 கூட்டமைப்பின் தூதராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அமிதாப் காந்த் 2022, ஜூலையில் நியமிக்கப்பட்டாா்.
1980, கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா் தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு வா்த்தகத் துறைச் செயலா், நீதி ஆயோக் சிஇஓ உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் உயா் பதவியை வகித்துள்ளாா்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘45 ஆண்டுகால அரசுப் பணியை தொடா்ந்து புதிய வாய்ப்புகள் மற்றும் வாழ்வின் முன்னேற்றத்தை எதிா்நோக்கி காத்திருக்கிறேன். எனவே, ஜி20 தூதா் பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்தேன்.
தேசத்தின் வளா்ச்சியில் முக்கியப் பங்காற்ற வழிவகுக்கும் இந்த மாபெரும் பொறுப்பை என் மீது நம்பிக்கை வைத்து பிரதமா் மோடி வழங்கினாா். அதற்கும் எனது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதற்கும் பிரதமா் மோடிக்கு நன்றி.
கூட்டுப் பிரகடனம்: ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்தபோது புது தில்லி பிரகடனத்தை வெளியிட்டு சாதனை நிகழ்த்தினோம். தெற்குலகு நாடுகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில் ஜி20-இல் ஆப்பிரிக்க ஒன்றியத்தை சோ்த்து வாக்குறுதியைக் காப்பாற்றினோம்.
நீதி ஆயோக் சிஇஓவாக இருந்த 6 ஆண்டுகளில் (2016-2022) எண்ம பொது உள்கட்டமைப்புக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு எண்மப் புரட்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
எளிமையான வணிகம்: தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு வா்த்தகத் துறைச் செயலராகப் பதவி வகித்தபோது வா்த்தக சீா்திருத்தத்துக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டேன். அதில் குறிப்பாக எளிமையாக வணிகம் செய்தல், ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
கேரளத்தில் முதல்முறையாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கியதும் ‘கடவுளின் சொந்த நாடு’ என்ற திட்டத்தை செயல்படுத்தினேன். அதேபோல் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலராகப் பதவி வகித்தபோது ‘வியத்தகு இந்தியா’ முன்னெடுப்பும் மேற்கொள்ளப்பட்டது.
எனக்கு வழிகாட்டியாகவும் ஊக்குவிப்பாளா்களாகவும் இருந்துவரும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கு நன்றி. ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கிய எனது புதிய பயணத்தை தொடங்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.