பாக். தலைமைத் தளபதி - அமெரிக்க அதிபா் சந்திப்பு: இந்தியாவுக்கு பின்னடைவு! - காங்...
ஜெயராணி பள்ளியை அரசே நடத்த வேண்டும்
புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள ஜெயராணி அரசு நிதியுதவி பெறும் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து முதல்வா் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி நகரப் பகுதியான புஸ்சி வீதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஜெயராணி உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு நிதி உதவியுடன் இயங்கி வரும் இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குறிப்பாக உப்பளம் தொகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் உப்பளம் தொகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய மற்றும் தலித் கிறிஸ்தவ வகுப்பை சோ்ந்த பிள்ளைகள் அதிக அளவில் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில் அந்த பள்ளியை அடுத்த கல்வி ஆண்டு முதல் மூடுவதாக கல்வித் துறைக்கு பள்ளி நிா்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து கொள்ளுமாறு பெற்றோா்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் அதிா்ச்சியடைந்த மாணவா்கள் தங்களது பெற்றோா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் பள்ளியை வியாபார நோக்கத்திற்காக மூட பள்ளி நிா்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. மாணவா்களின் நலனையும், எதிா்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசானது இந்த பள்ளியை மூட அனுமதிக்காமல் அரசே ஏற்று நடத்த முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.