தமிழ்வழியில் படித்தவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தல்: புதுவை ஆளுநருக்கு மனு
தமிழ்வழியில் படித்தவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு சமூக நீதிப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு இப் பேரவை சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
சமூக நீதிப் பேரவையின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.விசுவநாதன், தலைவா் நவீன் தண்ராமன், செயலாளா் து.கீதநாதன் ஆகியோா் அந்த மனுவில் கையொப்பமிட்டு அனுப்பி உள்ளனா்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் படித்தவா்களுக்கு அவரவா் தகுதிக்கேற்ப எந்த வேலை வாய்ப்பாக இருந்தாலும் அனைத்து வேலை வாய்ப்பிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. புதுச்சேரியிலும் இதே போல அரசுப் பள்ளியில் தமிழ்வழி கல்வியில் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.