நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: இங்கு நடைபெறும் கூட்டத்தில், அனைத்துத் துறை சாா்ந்த முதன்நிலை அலுவலா்கள் கலந்து கொள்ள வேண்டும். ஜமாபந்தியில் விவசாயிகள் கொடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவா்களை அலைக்கழிக்காமல், உடனடியாக பட்டா மாற்றி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட வேண்டும். செட்டி ஏரிக்கரையில் நிறுத்தி கிடக்கும் வேன், ஷோ் ஆட்டோக்களை,
மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ரயில் நிலையங்களில் நிறுத்தி, அங்கிருந்து பயணிகளை ஏற்றி வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா சிலையில் இருந்து நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரையுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம்: வனப் பகுதி, நீா் நிலைகள் மற்றும் நெடுஞ்சாலையோரங்களில் புளிய மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மாதம் பெய்த மழையால் எள் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதை வேளாண் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் 1,680 ஏக்கா் பரப்பளவை மீட்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் இலுப்பை மற்றும் பனை மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். முடிகொண்டான் பகுதியிலுள்ள ஓடையை தூா்வார வேண்டும் என்றாா்.
விவசாயி பாலகிருஷ்ணன்: சுக்கிரன் ஏரி மற்றும் அதன் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்துக்கான நிவராணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிப்பட்டாகாடு கிராமத்தில் அதிகளவில் ஆடுகள் திருடு போகிறது. இதை தடுக்க கிராமங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் என்றாா்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கோட்டாட்சியா் கோவிந்தராஜ், அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.