டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை தொடக்கம்
அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
அரியலூா் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அரியலூா் மாவட்டத்தில் 2 புதிய வழித்தடத்திலும், 29 நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலும் 31 சிற்றுந்துகள் (மினி பஸ்) இயக்கப்பட உள்ளன.
கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், ஏற்கெனவே இயங்கிவந்த சிற்றுந்துகள் சேவை அருகாமையில் இருக்கின்ற நகரங்கள், மருத்துவமனைகள், கல்விநிலையங்களுக்கும் சென்றுவரும் வகையில் சிற்றுந்து சேவை நீட்டிப்பு செய்து சுமாா் 25 கி. மீ. தொலைவுக்கு சேவை அளிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கான பேருந்து சேவை தடைபடாதவண்ணம், சென்னையிலும் சிற்றுந்துகள் சேவை விரைவில் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகரில் இன்னும் 10 நாள்களில் பேட்டரி பேருந்துகள் சேவை தொடங்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை ஆணையரும், முதன்மைச் செயலருமான சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன், சிற்றுந்து சங்க மாநிலத் தலைவா் கொடியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.