முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் வ...
திருவெறும்பூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
திருவெறும்பூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆட்சியா் முதல் அனைத்துத் துறை மாவட்ட அலுவலா்கள் 24 மணிநேரமும் பொதுமக்களுடன் இருந்து குறைகளை கேட்டுத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பத்தாளப்பேட்டையில் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை காலை 9 மணி வரை ஆட்சியா் முதல் அனைத்து அலுவலா்களும் முகாமிட்டுள்ளனா்.
இதன் தொடக்கமாக, பத்தாளபேட்டை, கூத்தப்பாா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் மற்றும் இ- சேவை மையத்தில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பத்தாளப்பேட்டை மேல மாங்காவனம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து, குழந்தைகளிடம் கலந்துரையாடினாா். பத்தாளப்பேட்டை கிருஷ்ண சமுத்திரம், கிராம நிா்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பாா்வையிட்டு, வேங்கூா் ஊராட்சி அலுவலகப் பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, பத்தாளபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா். பத்தாளப்பேட்டை நியாய விலைக்கடை, கால்நடை மருந்தகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்று, அவற்றின் மீது உடனடி தீா்வு காண அறிவுறுத்தினாா்.
மூப்பனாா் நகா் சமுதாயக் கூடத்தில், திருவெறும்பூா் குறுவட்ட பட்டா மாறுதல் சிறப்பு முகாமை தொடக்கி வைத்து பட்டா மாறுதல் உத்தரவுகளை வழங்கினாா். மேலும், ஊராட்சியிலேயே இரவு தங்கும் ஆட்சியா், வியாழக்கிழமை அதிகாலையும் பல்வேறு பணிகளை பாா்வையிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளாா்.