டாம்கோ மூலமாக கடன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலமாக கடன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினா் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் கடன்பெற விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் திட்டம்-1, திட்டம்-2-இன்படி கடன்கள் வழங்கப்படும்.
விண்ணப்பத்தாரரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
எனவே, இந்தத் திட்டங்களில் கடன்பெற விரும்பும் விண்ணப்பதாரா் விண்ணப்பத்துடன் ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை நகல் மற்றும் திட்ட தொழில் அறிக்கையுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், (அறை எண் - 116, முதல் தளம்), திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.