டிரம்ப் உடனான சந்திப்பில் 'கோட்' அணியாதது ஏன்? ஸெலென்ஸ்கி பதில்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பின்போது 'கோட்' அணியாதது ஏன் என்ற கேள்விக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அலித்த பதில் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 28) சந்தித்துப் பேசிய ஸெலென்ஸ்கி, அங்கு அவா்களின் காட்டமான விமா்சனத்தை எதிா்கொண்டு பேச்சுவாா்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறினாா்.
உக்ரைனில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஸெலென்ஸ்கி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு உக்ரைனுக்காக பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டும் என ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நிபந்தனைகள் விதிக்கும் நிலையில் உக்ரைன் இல்லை எனவும் தாங்கள் சொல்வதைக் கேட்டு கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதைத் தவிர ஸெலென்ஸிக்கு வேறு வழியில்லை என்றும் டிரம்ப்பும் ஜே.டி. வான்ஸும் கூறினா்.
தங்களை மறுத்து பேசுவதன் மூலம் அமெரிக்காவை ஸெலென்ஸ்கி அவமதிப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா். இந்த காரசார விவாதத்தின் விளைவாக, தங்கள் நாட்டு கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே ஓவல் அலுவலகத்தைவிட்டு ஸெலென்ஸ்கி வெளியேறினாா்.
முன்னதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸெலென்ஸ்கி பதில் அளித்தார். அதில், டிரம்ப்பை சந்திக்க வரும்போது ஏன் கோட் அணியவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஸ்லெலென்ஸ்கி, எங்கள் நாட்டின் நீடித்துவரும் போர் முடிவுக்கு வந்திருந்தால் கோட் அணிந்தி வந்திருப்பேன் என்றும், அதுவரை அதுபோன்ற ஆடம்பர உடைகளை அணிவதில்லை எனவும் பதில் அளித்தார்.
எங்கள் நாட்டில் போர் முடிந்தால் உங்கள் உடைகளை விட ஆடம்பரமான உடைகளை அணிவேன் எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸெலென்ஸ்கி அளித்த இந்த பதில் இணையத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.