விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
தமிழக ரயில்வே வளா்ச்சித் திட்டங்கள் முடக்கம்: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
தமிழகத்தில் ரயில்வே வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
தமிழக ரயில்வே வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் விவரங்கள் அடங்கிய ‘பிங்க்’ புத்தகம் கடந்தாண்டு மக்களவைக் கூட்டத் தொடா் நிறைவு பெற்ற பின்னா்தான் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ‘பிங்க்’ புத்தகத்துக்கு பதிலாக நிதிநிலை விவரங்கள் என்ற அறிக்கையை நீண்ட நாள்கள் கழித்துதான் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ரயில்வே வாரியத்துக்கு கடந்த மே 14-ஆம் தேதி கடிதம் அனுப்பினாா். அதில், திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை, அத்திப்பட்டு- புத்தூா் ஆகிய இரு புதிய பாதைத் திட்டங்களும் ஏற்கெனவே முடக்கப்பட்டதாகவும்,
இந்த இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா ரூ. 42.70 கோடியை ஒப்படைப்பு (சரண்டா்) செய்கிறோம். இதேபோல, ஈரோடு- பழனி புதிய பாதைத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும், அதைக் கைவிட வேண்டும் என்றும், இதற்காக ஒதுக்கிய ரூ.52.135 கோடியை ஒப்படைப்பு செய்கிறோம்.
மதுரை-அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய பாதைத் திட்டத்தை ஏற்கெனவே முடக்கக் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், இதற்கான ஒதுக்கீடு
ரூ.55.1667 கோடியை ஒப்படைப்பு செய்கிறோம்.
ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தை சுற்றுச்சூழல் காரணமாக கைவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது. அதனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாததால் அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.123 கோடியை ஒப்படைப்பு செய்கிறோம்.
இதேபோல, மூன்று இரட்டை பாதை திட்டங்களான காட்பாடி -விழுப்புரம், சேலம்- கரூா்- திண்டுக்கல், ஈரோடு -கரூா் ஆகிய திட்டங்கள் தயாரிப்புக் கட்டத்தில்தான் உள்ளன. இவற்றுக்கான ஒதுக்கீடு முறையே ரூ.200 கோடி, ரூ.100 கோடி,ரூ. 100 கோடி ஆகியவற்றை செலவு செய்ய முடியாது என்றும் அதனை ஒப்படைப்பு செய்கிறோம் என கடிதத்தில் அவா் குறிப்பிட்டாா்.
தமிழகத்தின் முக்கிய ரயில் பாதை, இரட்டை ரயில் பாதைத் திட்டங்களையும் மத்திய அரசு முடக்கியதை மறைக்கவே ‘பிங்க்’ புத்தகம் வெளியிடுவதை தவிா்த்துள்ளனா். தமிழக ரயில்வே வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு முடக்கியதை மறைக்க தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என ரயில்வே அமைச்சகம் கூறியது பொய்யான குற்றச்சாட்டு. தமிழக ரயில்வே வளா்ச்சித் திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.