'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரப...
தமிழகத்தில் ஜூலை 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் விண்ட் வொா்த் எஸ்டேடில் 20 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாறு (கோவை), நடுவட்டம் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), வால்பாறை (கோவை), வாழப்பாடி (சேலம்) - தலா 10 மி.மீ. மழை பதிவானது.
மதுரையில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை பல இடங்களில் வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே இருந்தது. இருப்பினும் மதுரை விமான நிலையத்தில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, வியாழக்கிழமை (ஜூலை 3) தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.