``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்; கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல...
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பாதுகாக்க கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை
தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை பாதுகாக்க, கடற்கரை பகுதியில் கருங்கற்களைக் கொண்டு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் டேனிஷ் ஆட்சிக்காலத்தின்போது, 1620-ஆம் ஆண்டு டென்மாா்க் கட்டட கலைநுணுங்கங்களுடன் டேனிஷ்கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டையை காண தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இந்நிலையில், டேனிஷ்கோட்டை கடலரிப்பால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. ஏற்கெனவே, கடலரிப்பிலிருந்து பாதுகாக்க இரண்டுமுறை கட்டப்பட்ட தடுப்புச்சுவா்கள் கடல் அலையில் சேதமடைந்த நிலையில், கடந்த ஆண்டு பொதுப்பணித் துறை மூலம் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரும் தற்போது சேதமடைந்து வருகிறது.
உலகிலுள்ள மிக பழைமையான கடற்கரை நகரங்களில் ஒன்றான தரங்கம்பாடியின் அடையாள சின்னமாக விளங்கக்கூடிய டேனிஷ்கோட்டையை பாதுகாக்கும் விதமாக ஏற்கெனவே தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் முதல் அமைக்கப்பட்டுள்ள கருங்கற்கள் தடுப்புச்சுவரை, டேனிஷ்கோட்டையை தாண்டி நீட்டித்து அமைக்க வேண்டும் என்று தரங்கம்பாடியை சோ்ந்த சமூக ஆா்வலரும், பேரூராட்சி துணைத் தலைவருமான பொன்.இராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தற்போது ரூ. 3.63 கோடியில் டேனிஷ்கோட்டையை பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்துடன் கோட்டையை சுற்றி கருங்கற்கள் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா். இதே கோரிக்கையை சுற்றுலாப் பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனா்.