தருமபுரியில் முதல்வா் ‘ரோடு ஷோ’: மக்கள் உற்சாக வரவேற்பு
தருமபுரிக்கு சனிக்கிழமை இரவு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காரில் இருந்தபடியும், நடந்தும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றாா்.
சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அவா், தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க சாலை மாா்க்கமாக சனிக்கிழமை இரவு தருமபுரியை வந்தடைந்தாா்.
அவருக்கு, தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், தருமபுரி நகராட்சி ஆணையா் சேகா், நகராட்சித் தலைவா் லட்சுமி நாட்டான் மாது சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, தருமபுரி நகர நுழைவாயில் பகுதியான சேஷம்பட்டியில் திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டையில் இருந்து தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, ஒட்டப்பட்டி, பழைய குடியிருப்புப் பகுதி, அரசு கலைக் கல்லூரி வழியாக ‘ரோடு ஷோ’’ நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.
வேனில் அமா்ந்தபடியே சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்கள், திமுகவினருக்கு வணக்கம் செலுத்தியும், கையசைத்தபடியும் சென்றாா். சவளூா் பகுதியில் சென்றபோது, வேனைவிட்டு கீழே இறங்கி நடந்துசென்று பொதுமக்களைச் சந்தித்து, கைகுலுக்கி மனுக்களைப் பெற்றாா்.
அப்போது ஏராளமானோா் அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனா். வழியில் ஆங்காங்கே நாட்டுப்புறக் கலைஞா்கள் கலைநிகழ்ச்சியை நடத்தி முதல்வரை வரவேற்றனா்.
ஆட்சியா் அலுவலகப் பகுதியில் ‘ரோடு ஷோ’ நிறைவடைந்த பின்னா், புதிய ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள பயணியா் மாளிகையில் முதல்வா் ஓய்வெடுத்தாா்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், எம்.பி.யும், மாவட்டச் செயலாளருமான ஆ.மணி, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, சேலம் எம்.பி. செல்வகணபதி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.