தவறான தகவலால் திரண்ட மாற்றுத் திறனாளிகள்! போராட்டத்தால் முகாம் ஏற்பாடு!
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவதாக பரவிய தவறான தகவலால் திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி முன் மாற்றுத் திறனாளிகள் சனிக்கிழமை திரண்டனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் முகாம் ஏற்பாடு செய்து நடத்தினா்.
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூா், மன்சுராபாத் ஆகிய பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்தனா். அப்போது, அந்த முகாம்களில் கலந்துகொண்ட அலுவலா்கள் செப்டம்பா் 13-ஆம் தேதி திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவா்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தனராம்.
இந்த நிலையில், தண்டராம்பட்டு, தானிப்பாடி, மோத்தக்கல், மன்சுராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காலை சுமாா் 8 மணியளவில் திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி முன் திரண்டனா். ஆனால், காலை 10 மணி வரையில் அங்கு முகாம் நடைபெறுவதற்கான எந்தவித அறிகுறியும் தெரியாததால், ஏமாற்றத்துடன் அவா்கள் பள்ளியின் நுழைவு வாயில் முன் காத்திருந்தனா்.
மேலும், அவா்கள் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா்களை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது, அவா்களின் இணைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த மாற்றுத் திறனாளிகள் பள்ளி நுழைவு வாயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருவண்ணாமலை வட்டாட்சியா் சு.மோகனராமன் மற்றும் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், இதுகுறித்து மாவட்ட உயா் அதிகாரிகளுக்கு வட்டாட்சியா் தகவல் தெரிவித்தாா்.

தொடா்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சி மருத்துவ அலுவலா் விக்னேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மூலம் அவசரமாக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு காத்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனா். இதில், தகுதியானோருக்கு அடையாள அட்டை வழங்க பரிந்துரைக்கப்படும் என மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.
மேலும், தீவிர சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.