நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன! வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிா் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழக காவல் துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இதில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் தெய்வசெயல் என்பவா் மீது கல்லூரி மாணவி அளித்துள்ள புகாா் அதிா்ச்சி அளிக்கிறது. மாணவி புகாா் அளித்தவுடன் காவல் துறை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.
மாணவியின் புகாா் ஊடகங்களில் வெளியாகி, அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்த பிறகே காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஒவ்வொரு வழக்கிலும் இதுதான் நடக்கிறது. எங்கு பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் அதை மறைக்கவே திமுக அரசு முயற்சிக்கிறது. வேறு வழியில்லாத நிலை ஏற்படும்போது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
அப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளும் அதன்பிறகு என்ன ஆகின்றன என்றே தெரியவில்லை. அரக்கோணம் கல்லூரி மாணவி விஷயத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது வரவேற்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.