திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதுதான், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நிலைப்பாடு என்றும், அதில் உடன்பாடு இல்லையெனில் அமித் ஷாவுடன் பேசலாம் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளாா்.
சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் திமுக முதன்மைச் செயலா் டிஆா்.பாலு தொடா்ந்த அவதூறு வழக்கில் வியாழக்கிழமை ஆஜராகிய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
1967 தோ்தல் பரப்புரையின்போது கருணாநிதி பேசியதைக் கேட்டால், காங்கிரஸாா் இப்போதைய திமுக கூட்டணியில் இருக்கமாட்டாா்கள். காமராஜா் தனது வீட்டுக்கு குடிநீா் குழாய் இணைப்புகூட கொடுக்க மறுத்தவா். கடைசி வரை எந்த சொத்தையும் சோ்க்காதவா். எளிமையானவா். தனது முதல்வா் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு கட்சிப் பணிக்கு சென்றாா்.
இந்நிலையில், குளிா்சாதன வசதியின்றி காமராஜா் தூங்கமாட்டாா். கருணாநிதியை ஒப்பற்ற தலைவா் எனப் பாராட்டினாா் என்பதெல்லாம் திமுகவின் கட்டுக்கதை.
இரண்டு கழகங்களும் குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதுதான் காமராஜரின் கடைசி வாா்த்தை. காமராஜரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன அறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி, தனித்துப் போட்டியிட வேண்டும்.
காமராஜரை தாண்டி தமிழகத்தில் காங்கிரஸுக்கு வேறு அடையாளம் இல்லை. எனவே, இதையெல்லாம் சகித்து கொண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர வேண்டுமா என மக்கள் கேட்க தொடங்கிவிட்டனா்.
மக்களிடம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கூட்டணி கட்சிகள் புரிய தொடங்கிவிட்டன. கூட்டணியில் இருந்து விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் வெளியேறத் தயாராகி வருகின்றன. தோ்தல் நெருங்கும்போது திமுக தனித்து போட்டியிடும் சூழல் உருவாகும்.
அதிமுக-பாஜக கூட்டணி உருவானதில் எனது பங்கு இல்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது மத்திய அமைச்சா் அமித் ஷாவின் நிலைப்பாடு. இதில் உடன் பாடு இல்லையெனில் அவரிடம் பேசலாம். கூட்டணி ஆட்சி என்ற தொண்டா்களின் குரலைத் தான் வெளிப்படுத்தி வருகிறேன். பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட்டணி ஆட்சியை வலியுறுத்துகின்றன.
சமூகநீதி போராளியான மருத்துவா் ராமதாஸ், பாமகவை உருவாக்கியவா். பாமகவில் நிலவும் குழப்பம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றாா் அவா்.