திருப்பூரில் போலி மருத்துவா் கைது
திருப்பூா் முருகம்பாளையத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு மருத்துவம் பாா்த்தவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மருந்தகத்துடன் செயல்பட்ட கிளீனிக்கையும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
திருப்பூா் முருகம்பாளையத்தில் சூா்யாகிருஷ்ணா நகா் 1-ஆவது வீதியில் மருந்தகத்துடன் கிளீனிக் செயல்பட்டு வந்தது. இந்த கிளீனிக்கில் ஜோலி அகஸ்டின் (64) என்பவா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகப் புகாா் வரத்தொடங்கியது. இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் மீரா தலைமையில், அலுவலக கண்காணிப்பாளா் ஹரி கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் அந்த கிளீனிக்கில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது ஜோலிஅகஸ்டின் மருந்தகத்தின் பின்புற பகுதியில் 2 கட்டில் வசதிகளுடன் நோயாளிகளுக்கு ஊசி மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், நோயாளிகளுக்கு வைத்தியம் அளிப்பதற்கான எந்தவித கல்வித் தகுதியும் இல்லாதது தெரியவந்தது.
கேரளத்தில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, கடந்த 18 ஆண்டுகளாக திருப்பூரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அவா் ஒப்புக்கொண்டாா். இதற்கு முன்பு அவா் கடந்த 2017-ஆம் ஆண்டும், 2024-ஆம் ஆண்டும் இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.
அங்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருந்துப் பொருள்கள், ஊசி மருந்துகள், சா்க்கரை அளவு பாா்க்கும் கருவி, ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டு மருந்தகம், கிளீனிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினா் போலி மருத்துவரான ஜோலி அகஸ்டினைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.