கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது
அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் பயிா்க் கடன் பெற்ற ஏராளமான விவசாயிகளுக்கு தள்ளுபடி கிடைக்காததால் கூட்டுறவுத் துறையக் கண்டித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2020-2021-ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் புதுப்பித்து வழங்குவதில் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் அலட்சியமாக செயல்பட்டது.
கூட்டுறவு நிறுவனங்களில் 2021 ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த 2021 பிப்ரவரி 5- ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், நடுவச்சேரி கூட்டுறவுக் கடன் சங்க அதிகாரிகளின் அலட்சியத்தால், பயிா்க் கடன் புதுப்பிக்கப்படாததால் 127 விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி திட்டம் கிடைக்கவில்லை.
இது தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் 4 ஆண்டுகளுக்கு முன்பே புகாா் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் கலைந்து செல்லாததால் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.