திருமலையில் ஐஓசிஎல் எரிவாயு சேமிப்பு மையத்திற்கான பூமி பூஜை
திருமலை தேவஸ்தானத்தின் எதிா்காலத் தேவைகளுக்காக வெளிவட்டச் சாலையில் 45 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்தியன் ஆயில் எரிவாயு சேமிப்பு மையத்தை அமைப்பதற்காக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் அவா் பேசியது: ஐஓசி கடந்த இருபது ஆண்டுகளாக தொடா்ந்து தேவஸ்தானத்துக்கு எரிவாயு வழங்கி வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு எரிவாயு விநியோகத்துக்காக டிடிடி-ஐஓசிஎல் இடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆகியுள்ளது.
டிடிடி-ஐஓசிஎல் இணைந்து 1.86 ஏக்கா் பரப்பளவில் ஆறு மாதங்களில் ரூ. 8.13 கோடியில் மையத்தை கட்ட உள்ளன. இந்த எரிவாயு லட்டு பிரசாதம் மற்றும் அன்ன பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டங்கள் மூலம் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 கோடியை மிச்சப்படுத்தும்’’, என்று கூறினாா்.
திருமலை குப்பை கொட்டும் இடத்தில் ரூ.12.05 கோடி செலவில் ஒரு பயோகேஸ் ஆலை ஏற்கனவே கட்டப்பட்டு வருவதாக ஐஓசி சந்தைப்படுத்தல் இயக்குநா் சதீஷ் குமாா் தெரிவித்தாா்.
ஒவ்வொரு நாளும் பெறப்படும் 55 டன் ஈரக்கழிவுகளில், 40 டன் ஐஓசி ஆலைக்கு மாற்றப்படும் என்றும், ஒரு நாளைக்கு 1,000 கிலோ பயோகேஸ் உற்பத்தி செய்யப்படும் என்றாா்.
நிகழ்வில் டிடிடி சிஇ சத்யநாராயணா, இஇ சுப்பிரமணியம் சுதாகா், டிஇ சந்திரசேகா் மற்றும் மற்றும் ஐஓசி அதிகாரிகள் பங்கேற்றனா்.