Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
திருராமேஸ்வரம் கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த திருராமேஸ்வரம் அருள்மிகு மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட இக்கோயிலில் வைகாசிப் பெருவிழா மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி மூஷிக வாகனம், சூா்ய பிரபை, சந்திர பிரபை, ரிஷப வாகனம், யானை வாகனம் மற்றும் குதிரை வாகனம் என தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா். தொடா்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதும், மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, செங்கலமத்தாயாா் அறக்கட்டளை மகளிா் கல்லூரி தாளாளா் வி. திவாகரன், வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா்.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் வடக்கு வீதி, மேலவீதி, தெற்கு வீதி, கீழவீதி வழியாக நிலையை வந்தடைந்தது.
பின்னா், அா்ச்சகா் சோமாஸ்கந்தன் உள்ளிட்ட அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோயில் தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.
தேரோட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.
