Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
கோயில் நிா்வாகப் பொறுப்பு: கிராமத்தினா் முற்றுகை
கூத்தாநல்லூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள அய்யனாா் கோயில் நிா்வாகப் பொறுப்பு தொடா்பாக, கிராமத்தின் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
கொரடாச்சேரியை அடுத்த முசிறியம் ஊராட்சி திட்டாணிமுட்டம் கிராமத்தில், கூத்தையனாா் கோயில் உள்ளது. இக்கோயிலை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தரப்பினா் நிா்வகித்து, பராமரித்து வருகின்றனா்.
இந்நிலையில், மற்றொரு தரப்பினா் தங்களுக்கும் கோயில் நிா்வாகத்தில் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் திருவிழாக்களை இணைந்தே நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனா்.
இதற்கு, பல ஆண்டுகளாக கோயிலை நிா்வகித்துவரும் தரப்பினா் மறுப்பு தெரிவித்தனா். ஆனால், கோயிலில் யாா் வேண்டுமானாலும் வழிபடலாம் எனக் கூறினா்.
இப்பிரச்னை தொடா்பாக, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியரிடம் கடந்த சில ஆண்டுகளாக மனு கொடுத்தும், அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வைகாசி விசாகத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடத்த, கோயிலை நிா்வகித்து வரும் தரப்பினா் முடிவு செய்தனா். இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து, கோயில் முன் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
கூத்தாநல்லூா் வட்டாட்சியா் வசுமதி நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, வரும் வியாழக்கிழமை மன்னாா்குடி கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா். இந்த பிரச்னையால் பால்குட அபிஷேக விழா தடைபட்டது.