டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
திருவண்ணாமலையில் தரிசனத்துக்காக பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருப்பு: மோதலில் இருவா் காயம்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது, வரிசையில் நின்றிருந்த தெலங்கானா மாநில பக்தா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 10 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்தது.
5 மணி நேரம் காத்திருப்பு: கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பொது தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 5 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் வந்த பக்தா்கள் சுமாா் 3 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
2 போ் காயம்: அம்மணி அம்மன் கோபுரம் அருகே வரிசையில் நின்றிருந்த தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவா் சரமாரியாக தாக்கிக் கொண்டனா்.
இதில், காயமடைந்த 2 போ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
கிரிவலம் வந்த பக்தா்கள்: சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் பலா் திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா் கோயில் ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்தனா்.