திருவள்ளூர்: 369 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் செயல்பட்டு வரும் குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியாளர்-301, உதவியாளர்-68 பணிக்காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளதால் வரும் 23-க்குள் விண்ணபித்து பயன்பெறலாம் என ஆட்சியர் மு.பிரதாப் தெபிவித்தார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடிபணியாளர் மற்றும் 68 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்பேரில் மாவட்டத்தில் வட்டாரம், திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யவுள்ள அங்கன்வாடி பணியாளர் (ம) உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை (ம) இனசுழச்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகங்களில் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை https://tiruvallur.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே இப்பணிக்கு தகுதியானோர் வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்நது 12 மாத காலம் பணியினை முடித்தபின், அவர்களுக்கு சிறப்பு காலமறை ஊதியம் வழங்கப்படும். அதன்பேரில் அங்கன்வாடி பணியாளர் மாதந்தோறும் ரூ.7700, அங்கன்வாடி உதவியாளர் ரூ.4100 தொகுப்பூதியமாக வழங்கப்படும். அதில் 12 மாதத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் மாதநதோறும் ரூ.7700-24200, ரூ.4100-12500 என்ற வீதத்தில் வழங்கப்படும்.
1,352 எஸ்.ஐ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி பணியாளருக்கு பிளஸ்2, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்கு 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். அதில் விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25 முதல் 40 வரையில் இருக்கலாம். அதேபோல் விதவைகள், ஆதரவற்ற பெண்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 43 வயது வரையில் இருக்கலாம்.
காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவர், அதே கிராம ஊராட்சிகுட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர், அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். அதேபோல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகராட்சிகளில் குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு, அருகிலுள்ள வார்டு, மைய அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரத்தில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, பள்ளி மாற்றுச்சானறிதழ், மதிப்பெண் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளின் நகல்களை இணைத்து அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.