பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
திருவானைக்காவல் கோயில் ‘அகிலா’ வுக்கு பிறந்த நாள்
திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இறைப் பணியாற்றி வரும் யானை அகிலாவுக்கு சனிக்கிழமை 23 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி யானை அகிலாவை அதன் கொட்டாரத்திலிருந்து கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் அழைத்து வந்தாா். அதைத் தொடா்ந்து நாச்சியாா் தோட்டத்தில் யானை அகிலா நாள்தோறும் குளிக்கும் தொட்டி அருகே கஜபூஜை செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது யானை அகிலாவுக்கு கழுத்தில் மிகப்பெரிய மாலையும், புது வஸ்திரங்களும் அணிவிக்கப்பட்டன. பின்னா் அங்கிருந்த பக்தா்கள் யானை அகிலா மீது மலா் தூவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா். இதை ஏற்கும் விதமாக யானையும் துதிக்கையை தூக்கி தலையை ஆட்டியது.
அதன் பின்னா் தட்டுகளில் வழங்கப்பட்ட பொரி உருண்டை, கடலை மிட்டாய், ஆப்பிள், கொய்யா, பலா, தா்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை யானை அகிலா மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்து, குளியல் தொட்டியில் ஆனந்தக் குளியலும் போட்டது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் யானைப் பாகன் பா. ஜெம்புநாதன், கோயில் பணியாளா்கள் செய்தனா்.