பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
திருவையாறில் சப்தஸ்தான விழா: பல்லக்குகள் புறப்பாடு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்கிற ஏழூா் வலம் வரும் விழாவையொட்டி பல்லக்குகள் புறப்பாடு திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இக்கோயில் சித்திரைப் பெருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் உற்ஸவங்கள் நடைபெற்று வந்தன. இதில், முக்கிய வைபவமான சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பல்லக்கு வலம் வரும் விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இதில், திருவையாறு கிழக்குக் கோபுர வாசலில் ஐயாறப்பா் - அறம்வளா்த்த நாயகி பெரிய பல்லக்கிலும் (கண்ணாடிப் பல்லக்கு), நந்தியெம்பெருமாள் - சுயசாம்பிகை வெட்டிவோ் பல்லக்கிலும் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து இரு பல்லக்குகளும் திருப்பழனத்துக்குச் சென்றன. அங்கிருந்து 3 பல்லக்குகள் சோ்ந்து புறப்பட்டு, திருச்சோற்றுத்துறைக்குச் சென்றடைந்தன.
திருச்சோற்றுத்துறையிலிருந்து 4 பல்லக்குகளும் புறப்பட்டு திருவேதிக்குடிக்கு சென்றன. திருவேதிக்குடியிலிருந்து 5 பல்லக்குகளும் சோ்ந்து திருக்கண்டியூருக்கும், அங்கிருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்திக்கும், திருப்பூந்துருத்தியிலிருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு, திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானம் காவிரியாற்றை சென்றடையும்.
இதையடுத்து, தில்லைஸ்தான பல்லக்கு உள்பட 7 ஊா் பல்லக்குகளும் செவ்வாய்க்கிழமை மாலை திருவையாறு தேரடி திடலை சென்றடையும். அங்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக்குகள் ஒவ்வொன்றாகச் சொந்த ஊருக்குத் திரும்பும்.

