திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் நேற்று(மே 4) இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
தஞ்சை மாவட்டம் திருவையாறு கடுவெளி ஆச்சனூர், கோனேரிராஜபுரம், தில்லை ஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிருக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வாழை மரங்கள் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில், நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் செலவு செய்து, வெட்டும் பருவத்தில் வாழைத்தாரோடு மரங்கள் முறிந்து சாய்ந்துள்ளதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேதம் அடைந்துள்ள வாழை மரங்களுக்கு தமிழக அரசு தக்க இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.