திரைத்துறையில் நீடிக்கும் பாலின பாகுபாடு..! மாதுரி தீக்ஷித்!
சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற நடிகை மாதுரி தீக்ஷித் திரைத்துறையில் ஆண்,பெண் பாகுபாடு அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
1984இல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மாதுரி தீக்ஷித் ஆண்கள் ஆதிக்கமுள்ள சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
பத்மபூஷன் விருது பெற்றுள்ள மாதுரி தீக்ஷித் 70க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1999-ல் மருத்துவர் ஸ்ரீராமைத் திருமணம் செய்துகொண்ட மாதுரி தீட்சித், அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடந்து பங்கேற்று வருகிறார்.
காலத்துக்கும் நிரூபிக்க வேண்டிய சூழலில் பெண்கள்
இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் பேசியதாவது:
பெண்கள் காலத்துக்கும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் எனவும் பார்வையாளர்களை எங்களாலும் ஈர்க்க முடியுமென ஓவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது.
உண்மையில் சினிமா துறையில் பாகுபாடு உள்ளது. குழந்தை அடியெடுத்து வைப்பதுபோல ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்து வைத்து முன்னேறுகிறோம்.
பாகுபாடு நடைபெறவில்லையென்பதை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதை நோக்கிதான் தினமும் வேலை செய்து வருகிறோம்.
திரைத்துறையில் நீடிக்கும் பாலின பாகுபாடு
சம்பளத்திலேயே ஆண், பெண் பாகுபாடு உள்ளது. ஆண்கள் ஒருமுறை செய்வதை நாங்கள் 10 முறை அதிகாமாக செய்ய வேண்டியுள்ளது. இது மிகவும் கடினம்.
இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்வதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இதற்கு நடிகர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன்.
வசூலில் அசத்திய பெண்களுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்ட்ரீ 2 போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும். இதற்கு குறுக்கு வழிகள் என எதுவும் இல்லை என்றார்.
கடைசியாக பூல் புலையா 3 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 57 வயதிலும் முதன்மை கதாபாத்திரமாக இணையத்தொடரிலும் நடித்துள்ளார்.