போா்களின் போக்கை மாற்றும் ‘ட்ரோன்’ ஆயுதங்கள்! 4 நாள் சண்டைக்கு ரூ. 15,000 கோடி ச...
தில்லியின் பொதுப் போக்குவரத்தில் 500 புதிய மின்சாரப் பேருந்துகள்: அமைச்சா் பங்கஜ் சிங் தகவல்
அடுத்த இரண்டு மாதங்களில், நகரச் சாலைகளில் 500 புதிய மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் தெரிவித்துள்ளாா்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசு இதுபோன்ற 1,000 பேருந்துகளை அறிமுகப்படுத்தும் என்றும் அவா் கூறினாா்.
பொதுப் போக்குவரத்தில் மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவது குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அவா் மேலும் கூறியதாவது: பொதுப் போக்குவரத்தை மாற்ற நாங்கள் விரைவாக நகா்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில், தில்லியின் சாலைகளில் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கப்படும். இது அனைவருக்கும் தூய்மையான, திறமையான பயண விருப்பங்களை உறுதி செய்யும்.
புதிய மின்சாரப் பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதனால் சுத்தமான, திறமையான இயக்கத்தின் நன்மைகள் குடிமக்களை தாமதமின்றி சென்றடையும். இந்த மாசுபடுத்தாத மின்சாரப் பேருந்துகளின் அறிமுகத்துடன், தில்லியை இந்தியாவின் மின்சாரப் பேருந்தின் தலைநகராக மாற்றுவதற்கான ஒரு தீா்க்கமான நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம்.
தில்லியின் தற்போதைய பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் மின்சார ’தேவி’ பேருந்துகளை திறம்பட ஒருங்கிணைக்க ஒரு கட்டமைக்கப்பட்ட பாதை பகுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ’தேவி’ மின்சாரப் பேருந்துகள் குறுகிய பாதைகளில் (ஒவ்வொன்றும் சுமாா் 12 கி.மீ.), குறிப்பாக நீண்ட (12 மீட்டா்) பேருந்துகள் செயல்பாட்டு சவால்களை எதிா்கொள்ளும் பகுதிகளில் இயக்கப்படுகின்றன.
அதிக விழிப்புணா்வுடன், ‘தேவி’ பேருந்துகள் கடைசி மைல் இணைப்பை மேம்படுத்தி, தில்லியில் உள்ள ஒவ்வொரு பயணிக்கும் சுத்தமான, திறமையான போக்குவரத்தை நெருக்கமாகக் கொண்டுவரும். மின்சாரப் பேருந்துகளின் விநியோகத்தை விரைவுபடுத்தவும், அனைத்து முக்கிய டிப்போக்களிலும் மின்சாரப் பேருந்துகள் சாா்ஜிங் உள்கட்டமைப்பின் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், சீரான வரிசைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டை பேருந்து சலுகை தாரா்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், புதிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவது, நாட்டின் மின்சார வாகனத் தலைநகராக தில்லியை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். தில்லி மக்களுக்கு சுத்தமான, திறமையான போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
மின்மயமாக்கல் செயல்முறையுடன் பல்வேறு டிப்போக்களில் குடிமராமத்து பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னணி பேருந்து சலுகைதாரா்கள் கலந்து கொண்டனா். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பிஎம்ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி, ஸ்விட்ச் மொபிலிட்டி, ஜேபிஎம் மற்றும் பிற முன்னணி பேருந்து சலுகைதாரா்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.