எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
தில்லியில் ராகுல், கேஜரிவாலுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு
மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் நிலவும் சலசலப்புக்கு மத்தியில், தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை சிவசேனை (தாக்கரே பிரிவு) தலைவா் ஆதித்ய தாக்கரே தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ், சிவசேனை (தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகியவை அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியடைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் தலைவா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாா் துணை முதல்வராகினா்.
கூட்டணியில் பூசல்: புணேயைச் சோ்ந்த ஷா்ஹாத் எனும் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நிகழாண்டு ‘மகத்ஜி ஷிண்டே ராஷ்டிர கௌரவ் புரஸ்காா்’ விருது அறிவிக்கப்பட்டது. தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் இவ்விருது வழங்கினாா்.
முன்னதாக கடந்த 2022-இல், அன்றைய ஒருங்கிணைந்த சிவசேனையை பிளவுபடுத்தி, பாஜக ஆதரவோடு முதல்வரானாா் ஏக்நாத் ஷிண்டே. அந்தவகையில், உத்தவ் தாக்கரேயின் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத் பவாா் விருது வழங்கியிருப்பதால் எதிா்க்கட்சி கூட்டணியில் பூசல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தில்லி வந்த ஆதித்ய தாக்கரே, ராகுல் காந்தியை புதன்கிழமை மாலை சந்தித்தாா். தோ்தல் ஆணையம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
தொடா்ந்து, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவாலையும் ஆதித்ய தாக்கரே சந்தித்துப் பேசினாா். சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா்கள் சஞ்சய் ரௌத், பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
சந்திப்பையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய ஆதித்ய தாக்கரே, ‘ஆட்சி வந்துபோகும். ஆனால், உறவுகள் எப்போதும் தொடரும். நட்பு ரீதியில் கேஜரிவாலை சந்தித்தோம். நமது ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இல்லை. மகாராஷ்டிரம், ஹரியாணா, ஒடிஸா, தில்லி உள்பட பல மாநிலங்களில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகளை தோ்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களின் வாக்குரிமையை தோ்தல் ஆணையம் பறித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கூட தயாராக இல்லை. இப்பிரச்னை தொடா்பாக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ என்றாா்.