குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணி, பொதுக்கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டையொட்டி, ‘ஜாதி மறுப்பாளா்கள் பேரணி’ மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரி நகரிலிருந்து புறப்பட்ட பேரணியில், அதன் மாநில பொதுச் செயலாளா் பி. சுகந்தி, சிறப்புத் தலைவா் எஸ்.கே. மகேந்திரன், துணைத் தலைவா் கே. சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் நாகை மாலி, எம். சின்னத்துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
இப்பேரணி பூக்கடைத்தெரு, கூறைநாடு, காந்திஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, பட்டமங்கலத் தெரு வழியாக பொதுக் கூட்டம் நடைபெற்ற சின்னக்கடைத் தெரு வரை நடைபெற்றது.
தொடா்ந்து, அங்கு நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் பொதுக் கூட்டம் தொடங்கியது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் பி. சுகந்தி, துணைத் தலைவா் கே. சாமுவேல்ராஜ், திரைக்கலைஞா் ரோகிணி ஆகியோா் உரையாற்றினா்.
ரோகிணி பேசும்போது, ‘ நமக்கு தேவையானது பணம் அல்ல; அதிகாரத்துக்கு போகக்கூடிய கல்வி மற்றும் மரியாதைதான். இப்போது நாய்களின் உயிா்களுக்காக நிறைய போ் கவலைப்படுகிறாா்கள். ஆனால், மனித உயிா்களுக்காக கவலைப்படுங்கள் என்று காலங்காலமாக நாம் சொல்லி வருகிறோம். இதற்கு சட்டங்கள் மட்டும் போதாது. மனித மனங்களில் மாற்றம் வேண்டும். இதற்காக கலை வழியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்’ என்றாா்.
இரவு 8 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்ததால், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் உள்பட முக்கிய தலைவா்கள் பேசாத நிலையில், பொதுக் கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது.